[Pooraayam.com, 17 August 2010]
இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்து ஒரு வருட காலம் கடந்துள்ள நிலையில், தமிழ் மக்களுக்கு எதிராக தற்போது ஒரு புதிய முனையில் அரசாங்கம் போரைத் தொடுத்துள்ளது. வன்னியிலும் கிழக்கு மாகாணத்திலும், பாதுகாப்பு என்ற பெயரில் அமைக்கப்படும் பாரிய படைமுகாம்களும், இராணுவக் குடியிருப்புக்களும் தமிழ் மக்களுடைய எதிர்கால இருப்பையே கேள்விக்குறியாக்குவதாக அமைந்திருக்கின்றது. போர் முடிவுக்கு வந்து ஒரு வருடம் சென்றிருக்கும் நிலையிலும், அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை தமிழர்கள் முன்வைக்கும் நிலையில், புதிதாக உருவாக்கப்படும் இராணுவக் குடியிருப்புக்கள் தமிழ் மக்களுடைய பாரம்பரிய நிலங்களை அபகரிப்பதாகவும், நீண்ட காலத்தில் இனஅழிப்பை நோக்கமாகக் கொண்டவையாகவும் அமைந்திருக்கின்றன.
வன்னியிலும், கிழக்கு மாகாணத்திலும் பாரிய படை முகாம்களும், இராணுவக் குடியிருப்புக்களும் அமைக்கப்படும் அதேவேளையில், தமிழ் மக்களுடைய மீள்குடியேற்றம் என்பது அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் பின்தள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள சுமார் 4,500 ஏக்கர் நிலம் இராணுவத்துக்காகச் சுவீகரிக்கப்பட்டுள்ள அதேவேளையில், இதனால் மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமது குடியிருப்புக்களை இழந்து நிர்க்கதியாகியிருக்கின்றார்கள். இதனைவிட வன்னியில் சுமார் 10,000 ஏக்கர் காணி இராணுவத்துக்காகப் பெறப்பட்டிருக்கின்றது. இதன் மூலமாக வடபகுதியின் சனத்தொகை விகிதாசாரத்தை மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியிருக்கின்றது. அதாவது இராணுவக் குடியிருப்புக்களை அமைப்பது என்ற அரசாங்கத்தின் திட்டம் தமிழர்களின் எதிர்கால இருப்பையே கேள்விக்குறியாக்குவதாக அமைந்திருக்கின்றது.
வடபகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான படையினர் தற்போது உள்ளார்கள். குறிப்பாக நான்காம் ஈழப்போருக்கு முன்னதாக யாழ்ப்பாணத்திலேயே அதிகளவு இராணுவத்தினர் குவித்து வைக்கப்பட்டிருந்தார்கள். ஆனால், நான்காவது ஈழப்போரின் முடிவில் வன்னியிலேயே பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருக்கின்றார்கள். அரசாங்கம் இந்தப் படையினரை தொடர்ந்தும் வன்னிப் பெருநிலப்பரப்பில் வைத்திருப்பதற்கே விரும்புவதாகத் தெரிகின்றது. வன்னியின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நிரந்தரமான இராணுவ முகாம்களையும், இராணுவக் குடியிருப்புக்களை அமைத்துக்கொள்வதும்தான் அரசாங்கத்தின் தற்போதைய உபாயமாகும். இது தொடர்பிலான திட்டம் ஒன்று இராணுவத் தலைமைப் பீடத்தினால் தயாரிக்கப்பட்டு அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டு, அரசின் அங்கீகாரமும் அதற்காகக் கிடைத்திருக்கின்றது.
வன்னிப் பிராந்தியத்தில் ஒரு லட்சம் இராணுவத்தை வைத்திருப்பதற்கும், அவர்களுடைய குடும்பங்களை அந்தப் பகுதிகளில் குடியேற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என முக்கிய அமைச்சர் ஒருவர் மகாநாயக்க தேரர்களிடம் உறுதியளித்திருப்பது அரசாங்கத்தின் இந்தத் திட்டத்தை உறுதிப்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றது. படையினரின் குடும்பங்களையும் வன்னியில் குடியேற்றுவதன் மூலமாக அங்கு சிங்களவர்களின் எண்ணிக்கை 4,00,000 ஆக அதிகரிக்கக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிடுகின்றார். அவர்களுக்கான பாடசாலைகள், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் போன்றன அமைக்கப்படும் போது இந்தத் தொகை மேலும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதையும் மறுத்துவிட முடியாது. இதன்மூலம் வடபகுதியின் சனத்தொகையில் சிங்களவர்களின் தொகை கணிசமானளவுக்கு அதிகரிக்கும்.
வடக்கு, கிழக்குப் பகுதிகளில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீளத் தோற்றம் பெறுவதற்கு அனுமதிக்கக்கூடாது என்ற நோக்கத்துடனேயே இவ்வாறான நிரந்தர இராணுவ முகாம்களும், இராணுவக் குடியிருப்புக்களும் அமைக்கப்படுவதாக அரசாங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்படுகின்றது. இருந்த போதிலும், இவ்விடயத்தில் அரசாங்கத்தின் உபாயம் அது மட்டுமல்ல. வன்னியையும், கிழக்கு மாகாணத்தையும் சிங்கள மயமாக்குவதும், அதன் மூலமாக தக்கென ஒரு தாயகப்பகுதி உள்ளது என உரிமை கோர முடியாத நிலைக்குத் தமிழர்களை உள்ளாக்குவதும்தான் அரசாங்கத்தின் உபாயம். இதற்கான ஆரம்பமாகத்தான் யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் பிரதான பாதையான ஏ-9 வீதியிலள்ள முன்னைய பௌத்த விகாரைகள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டள்ளன. பல இடங்களில் புதிதாகவும் விகாரைகள் அமைக்கப்பட்டு புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
அரசாங்கம் இவ்விடயத்தில் நீண்டகாலத் திட்டம் ஒன்றின் அடிப்படையிலேயே செயற்படுவதற்கு முற்பட்டிருக்கின்றது. இராணுவ உயர் அதிகாரிகள் மட்டுமன்றி, பௌத்த மகா சங்கங்களின் ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டே அரசாங்கம் தன்னுடைய திட்டங்களைச் செயற்படுத்துகின்றது. வடபகுதியில் நிரந்தர இராணுவ முகாம்களை அமைத்துக்கொள்வதற்கும், இராணுவக் குடியிருப்புக்களை அமைத்துக்கொள்வதற்கும் சீன அரசாங்கமும், சீன இராணுவமும் பெரியளவில் உதவிகளை வழங்கிவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சீனாவின் தொழில்நுட்ப உதவிகள் கிடைக்கவில்லை என்றால் நிரந்தர இராணுவ முகாம்களை இந்தளவுக்கு விரைவாக அமைத்திருக்க முடியாது என இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவே தெரிவித்திருப்பது சீனாவின் இந்த உதவிகளை உறுதிப்படுத்தியிருக்கின்றது.
வன்னிப் பிராந்தியத்திலுள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் நிரந்தரமான இராணுவ முகாம்களை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற உபாயத்தை முதலில் முன்வைத்தவர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா எனத் தெரிவிக்கப்படுகின்றது. இராணுவத்தின் எண்ணிக்கையை நான்கு இலட்சமாக அதிகரிக்க வேண்டும் எனவும், வடபகுதியிலுள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் நிரந்தரமான இராணுவ முகாம்களை அமைக்க வேண்டும் எனவும் போர் முடிவடைந்த காலத்தில் யோசனை ஒன்றை அவர் முன்வைத்திருந்தார்.
அப்போது அதனை நிராகரித்த அரசாங்கம் இப்போது அவரது யோசனைகளைத் தூசி தட்டி எடுத்துவைத்து தம்முடைய சொந்தத் திட்டமாக நடைமுறைப்படுத்துகின்றது. முல்லைத்தீவு நகருக்கு அண்மையில் ஏற்கனவே நிரந்தரமான படைத்தளம் ஒன்று அமைக்கப்பட்டுவிட்டது. இது இராணுவ, கடற்படைத் தளமாக அமைக்கப்பட்டிரக்கின்றது.
இரண்டாவது நிரந்தர படை முகாம் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள புதுக்குடியிருப்புப் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கின்றது. இராணுவத்தின் 68 வது படையணியின் தலைமையகமும் இங்கு அமைக்கப்பட்டிருக்கின்றது. கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரணைமடுவில் விடுதலைப் புலிகளின் விமானத் தளம் இருந்த பகுதியில் பாரிய விமானப் படைத் தளம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்தப் பகுதியையும் படையினர் கையகப்படுத்தியிருக்கின்றார்கள். இதற்கு அடுத்ததாக ஏ-9 பாதையில் அமைந்திரக்கும் முருகண்டி மற்றும் அதனை அடுத்துள்ள சாந்தபுரம் போன்ற பகுதிகளில் பாரிய முகாம்கள் அமைக்கப்படுகின்றன. இந்தப் பகுதிகளில் மீளக்குடியேறுவதற்காக கொண்டுவரப்பட்டவர்கள். மீண்டும் முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள். பாரிய இராணுவ முகாம் ஒன்றையும், இராணுவக் குடியிருப்புக்களையும் அமைப்பதற்குத் தேவையான கொங்கிரீட் சுவர்கள் பெருமளவுக்குக் கொண்டுவந்து குவிக்கப்பட்டிருப்பதை இங்கு காணமுடியும்.
முறிகண்டி கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஏ-9 பாதையில் அமைந்திருப்பதாலும், வன்னியின் மத்தியில் அமைந்திருப்பதாலும் அந்தப் பகுதியில் பாரிய படைத் தளம் ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் முற்பட்டிருக்கின்றது. இந்தப் பகுதியில் மட்டும் 4,500 ஏக்கர் காணி கையகப்படுத்தப்பட்டுள்ள அதேவேளையில் வன்னிப் பிராந்தியத்தில் முழுமையாக சுமார் 10,000 ஏக்கர் காணியை கையகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாகக் கருதப்படும் இடங்களில் பாரிய முகாம்களும், இராணுவக் குடியிருப்புக்களும் அமைக்கப்படும். இதனைவிட கிராமங்கள் தோறும் 127 முகாம்களை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாம்களுக்கான இடங்கள் பெரும்பாலும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது. திருமலை சிங்கள மயமாக்கப்பட்டது போல வன்னி பெருநிலப்பரப்பையும் சிங்கள மயமாக்குவதற்கான ஒரு நீண்ட காலத் திட்டத்தின் ஆரம்பமே இது.
அண்மையில் வன்னி சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இது தொடர்பாக விரிவான ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் பெறுபேறாக பின்வரும் தகவல்கள் அவர்களால் சேகரிக்கப்பட்டுள்ளன. வன்னியில் இராணுவம் வகுத்துள்ள வியூகம் என்ன என்பதைத் தெளிவுபடுத்துவதாக இந்தத் தகவல்கள் அமைந்திருக்கின்றன. இனி இந்தத் தகவல்களைப் பார்ப்போம்.
01. ஏ-9 வீதியில் ஓமந்தை முதல் யாழ்ப்பாணம் வரையிலான பாதையின் இரு மருங்கிலுமுள்ள 250 மீட்டர் அகலத்துக்குள்ள காணிகளின் விபரங்கள் அரசாங்கத்தின் உத்தரவையடுத்து ஆளுநரால் பெறப்படுகின்றது. இராணுவத்தின் எதிர்காலத் தேவைகளைக் கருத்திற்கொண்டே இந்தத் தகவல்கள் திரட்டப்படுகின்றன.
02. முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கோப்பாபுலவில் 2,000 ஏக்கர் காணியை ஆளுநர் கையகப்படுத்தியுள்ளார். இதில் 250 ஏக்கர் வயற்காணி. 500 ஏக்கர் மேட்டுக்காணி. இவை பொதுமக்களுக்குச் சொந்தமானவை. வீச்சுக்குளம் பின்பகுதியிலுள்ள காடுகள் அழிக்கப்பட்டு மீதமுள்ள காணிகள் எடுக்கப்பட்டுள்ளன.
03. திருமுருகண்டி, இந்துபுரம், சாந்தபுரம் பகுதியில் 4,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 1,700 ஏக்கர் பொதுமக்களுக்குரியதாகும்.
04. கொக்குளாய், கொக்குத் தொடுவாய், தென்னமரவாடி, ஆண்டான்குளம் மற்றும் தண்ணி முறிப்பு ஆகிய பகுதிகளில் மீள்குடியேற்றத்தை மேற்கொள்வதற்கு அரசாங்கம் மறுப்புத் தெரிவித்திருக்கின்றது. இதில் ஏதோ மர்மம் இருப்பதாக சந்தேகிக்கப்பட வேண்டியிருக்கின்றது.
05. நித்திக்குளத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட 1,000 ஏக்கர் காணியை அரசு எடுத்திருக்கின்றது.
06. ஆரைத்துறைப் பகுதியில் 2,000 ஏக்கர் வயற்காணியை அரசு எடுத்திருக்கின்றது.
07. ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான 15 ஏக்கர் காணி கட்டடத்துடன் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டு திருத்த வேலைகள் இடம்பெற்று வருகின்றது. இதில் நிரந்தரமாகத் தங்கும் திட்டத்துடனேயே இராணுவம் உள்ளது. திணைக்களம் ஓலைக்குடிசைக்குள் முடக்கப்பட்டுள்ளது.
08. முல்லைத்தீவு நகரத்தில் 3 ஏக்கராக இருந்த இராணுவ முகாம் 30 ஏக்கர்களுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது. விஸ்தரிக்கப்பட்ட எல்லைக்குள்தான் மருத்தவமனை, கூட்டுறவுச் சங்கம், ரெலிக்கொம் மற்றும் வர்த்தக நிலையங்கள், பொதுமக்களின் காணிகள் என்பனவும் உள்ளடங்கியுள்ளன. முத்தையன்கட்டு அலைகரைப் பகுதியில் 240 ஏக்கர் காணியைப் பெறுவதற்கான முயற்சிகளையும் இராணுவம் மேற்கொண்டுள்ளது.
09. இலங்கை போக்குவரத்துச் சபைக்கு ஒதுக்கப்பட்டுள்ள காணியிலேயே முறிகண்டியில் பாரியளவிலான விடுதி ஒன்று கட்டப்படுகின்றது. இது சிங்கள வர்த்தகர் ஒரவரால் கட்டப்படுவதாகச் சொல்லப்படுகின்றது.
10. கோபலபுரவில் 20 இராணுவக் குடியிருப்புக்களும், ஒட்டுசுட்டானில் 15 இராணுவக் குடியிருப்புக்களும் அமைக்கப்படுகின்றன.
11. முல்லைத்தீவு - பதவியா வீதி தற்போது இராணுவத் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது.
12. முல்லைத்தீவு மாவட்டத்தின் காணி இடாப்பு ஓரிடத்தில் பத்திரப்படுத்தப்பட்டிருந்தது. இப்போது அது எடுக்கப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளது. இதன் மூலமாக பழைய ஆவணங்கள் அனைத்தும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.
13. தன்னுடைய கவனத்துக்குக் கொண்டுவராமல் ஒரு பரப்புக் காணியைக் கூட யாருக்கும் கொடுக்கக்கூடாது என ஆளுநர் அரசாங்க அதிபர் உட்பட அதிகாரிகள் அனைவருக்கும் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்திருக்கின்றார்.
அரசாங்கம் எவ்வாறான திட்டத்துடன் செயற்படுகின்றது என்பதை இந்தத் தகவல்கள் தெளிவாகப் புலப்படுத்துகின்றது. திட்டமிட்ட வகையிலான ஒரு இன அழிப்பே இது. இது தொடர்பான தகவல்களைப் பெற்று அவற்றை அம்பலப்படுத்தும் முயற்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறங்கியிருந்தாலும் கூட, இதனைத் தடுத்து நிறுத்தக்கூடிய பலத்தில் கூட்டமைப்பு இல்லை. அரசாங்கத்தின் திட்டங்கள் நிறைவேறினால் அடுததுவரும் சில வருடங்களிலேயே வன்னி சிங்கள மயமாகிவிடும். சிங்களம் இவ்விடயத்தில் நன்கு திட்டமிட்டுச் செயற்படுகின்றது. இதனைத் தடுப்பதற்கு எவ்வாறான உபாயங்களை வகுத்து நாம் செயற்படப்போகப்போகின்றோம்?
பூராயத்துக்காக
கொழும்பிலிருந்து சத்தியன்.