[Yarl.com]
'ஐஃபா' நடத்தி அசிங்கப்பட்டதைத் தொடர்ந்து புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களைக் கூட்டி வரும் ஜனவரி மாதம் கொழும்புவில், 'சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடல்' என்ற பெயரில் எழுத்தாளர் மாநாட்டை நடத்தத் திட்டமிட்டு இருக்கிறது இலங்கை அரசு. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சில எழுத்தாளர்களால் நடத்தப்படும் இந்த அமைப்பினை, 'தனது கொடூர முகத்தை மூடிக்கொள்ளும் முகமூடியாகவே பயன்படுத்தப் போகிறது இலங்கை அரசு' என்று தமிழ் ஆர்வலர்களிடம் எதிர்ப்புக் குரல் வலுத்து வருகிறது!
இது குறித்து ஈழ எழுத்தாளரும், 'மித்ரா' பதிப்பாளருமான எஸ்.பொ-விடம் பேசினோம். ''இலங்கை மண்ணிலே தமிழீழ விடுதலைக் கோரிக்கை முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆணி வேராக இருந்து வரும் புலம்பெயர் தமிழர்களின் போராட்ட உணர்வையும் வேரடி மண்ணோடு ஒழித்துக் கட்டத்தான் இந்த 'சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடல்' நாடகத்தை நடத்துகிறார்கள். நான் அறிந்த வரையில், கடந்த 25 வருடங்களாக 'சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்' என்ற அமைப்பே ஆஸ்திரேலியாவில் கிடையாது!
விடுதலைப் புலிகளின் கை ஓங்கி இருந்த கால கட்டத்தில், அடங்கிக்கிடந்த ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ப்ளாட் இயக்கத்தைச் சேர்ந்த ஒரு சில தமிழினத் துரோகிகளின் துணையோடுதான் இப்படி ஒரு பொய்யான அமைப்பை உருவாக்கி உலகை ஏமாற்றப் பார்க்கிறது இலங்கை அரசு. தமிழர்களை மட்டுமல்லாது, தமிழ்க் கலைகளையும் சிங்களப்படுத்துவதன் ஆரம்பம்தான் இந்த மாநாடு. வன்னிப் பகுதியில் தமிழ்க் குழந்தைகளுக்கு பாடசாலை இல்லை. உழைத்து, உயர்ந்து, உண்டு, உரிமைக்காகப் போராடிய ஈழத் தமிழன்... இன்று ஒருவேளைச் சோற்றுக்காக தட்டேந்தி நிற்கிறான். பிச்சைக்காரனாகிப் போன தமிழன் கையில் புத்தகத்தைக் கொடுத்து வாசிக்கச் சொல்லி தமிழைச் செம்மைப்படுத்தப்போகிறார்களா?
ஈவு இரக்கமின்றி பாஸ்பரஸ் கொத்துக் குண்டுகளால் தமிழர்களைப் பொசுக்கி எடுத்த இலங்கை அரசுக்கு இப்போது சர்வதேச அரங்கில் கெட்ட பெயர். எந்த நேரத்திலும் போர்க் குற்றவாளிகளாக ராஜபக்ஷே சகோதரர்கள் விசாரணைக் கூண்டில் ஏற்றப்படலாம். அதனால், உலக அரங்கில் தங்களை ஜனநாயகவாதிகளாகக் காட்டிக்கொள்ள நடத்தும் நாடகம்தான் இது. ஓர் இனத்துக்கு எதிராக அநியாயம் அரங்கேறும் போது, இனத்தின் மனசாட்சியாகவும், விடுதலைக் குறியீடாகவும் இருந்து நியாயத்துக்காகப் போராடுபவர்கள்தான் உண்மையான எழுத்தாளர்கள்.
அப்படிப்பட்ட எழுத்தாளர்கள் கொழும்பில் ஒன்றுகூட மாட்டார்கள். அப்படி கலந்துகொள்ள ஒப்புக்கொண்ட சில எழுத்தாளர்களிடமும் ஈழப் பிரச்னை பற்றி எதுவும் பேசக் கூடாது என்று வாக்குறுதி வாங்கி இருக்கிறார்கள். தமிழ் உணர்வும், மானமும் உள்ள தமிழ் எழுத்தாளர்கள் எவரும் இந்தப் போலி மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார்கள்...'' என்றார் ஆவேசத்துடன்!
ஏற்கெனவே, 'ஐஃபா' விழாவில் கலந்துகொண்ட திரைத் துறையினருக்கு எதிராக களம் இறங்கிய 'இந்து மக்கள் கட்சி'யின் அமைப்புச் செயலாளர் கண்ணனிடம் பேசினோம். ''தமிழகத்தில் காந்தளகம், மித்ரா போன்ற பதிப்பகங்களை ஈழத் தமிழர்கள் நடத்தி வருகிறார்கள். தமிழர்களின் பாரம்பரிய வரலாற்றை அறுத்து எறியும் நோக்கத்தில் தமிழக எழுத்தாளர்களையும் பதிப்பகங்களையும் ச.த.எ.ஒ. அமைப்பினர் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த மாநாட்டின் மூலம் தமிழகத் தமிழர் - இலங்கைத் தமிழர் இடையே முரண்பாடு ஏற்படுத்திப் பிளவுபடுத்துவதுதான் ராஜபக்ஷேவின் திட்டம்.
இலங்கையின் முகாம்களிலே வதைபடும் தமிழர்களை மீள் குடியேற்றம் செய்யும் வரை இலங்கையில் எழுத்தாளர் மாநாடு நடைபெறாது என்று கூறி இருந்தார் ச.த.எ.ஒ. அமைப்பின் அமைப்பாளர் முருகபூபதி. ஆனால், இப்போது திடீரென்று மாநாடு நடக்கப்போகிறது என்று அறிவிக்கிறார். இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது? ஏன் அப்படி மாற்றிப் பேசினார்? ஒரு வேளை அவர் கூற்றுப்படியே வைத்துக் கொண் டாலும், இப்போது இலங்கையில் தமிழர்கள் செல்வச் செழிப்போடு சந்தோஷமாகத்தான் வாழ்க்கை நடத்துகிறார்களா? சிங்களப் படைப் பாளிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடத் துடிக்கும் இந்த மாநாட்டு அமைப் பாளர்கள், போர் உக்கிரமாக இருந்த காலத்தில், இதே சிங்கள படைப்பாளிகள் மூலம் இலங்கை அரசை வலியுறுத்தி போரை நிறுத்தி இருக்கலாமே!
சுமார் 75 கோடி ரூபாய் செலவில் நடிகர், நடிகைகள் புடைசூழ எழுத்தாளர் மாநாட்டை நடத்தத் திட்டம் தீட்டி இருக் கிறார்கள். இதில் கலந்துகொள்ளும் தமிழ்ப் படைப்பாளிகளின் ஆக்கங்களை நாங்கள் புறக்கணிப்போம். தமிழகத்துக்குள் அவர்கள் எங்குமே கால் வைக்க முடியாதபடி எங்கள் எதிர்ப்பைக் காட்டுவோம்.'' என்றார் ஆவேசத்துடன்.
தமிழக அரசின் முன்னாள் அரசவைக் கவிஞரான புலமைப்பித்தன், ''நெல்சன் மண்டேலா, கோபி அன்னான், ஜிம்மி கார்ட்டர் போன்ற உலகத் தலைவர்கள் எல்லோருமே, 'இலங்கை நிலவரம் மிகுந்த கவலை அளிக்கிறது' என்று கருத்துத் தெரி வித்து இருக்கிறார்கள். ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தையே கொன்று ஒழித்ததுடன் மிஞ்சி இருக்கும் தமிழச்சிகளையும் சிங்கள இளைஞர்களுக்கு மணம் முடித்து கலப்பினத்தை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த அவலச் சூழலில் தமிழை வளர்க்கப்போகிறோம் என்று தமிழ் எழுத்தாளர்கள் ஒன்றுகூடப் போகிறார்களாம். தமிழனுக்கு எதிராக சிங்கள அரசு ஒவ்வொன்றாக எடுத்து வரும் ஆயுதங்களில் இதுவும் ஒன்று'' என்றார் கோபமாக..!
இந்த எதிர்ப்புகள் குறித்து 'ச.த.எ.ஒ.'-வின் அமைப்பாளர் முருகபூபதியிடம் பேசினோம். ''இந்த மாநாட்டுக்கும் இலங்கை அரசுக்கும் சம்பந்தம் இல்லை. 10 வருடங்களாக ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் இந்த மாநாட்டை இலங்கையில் நடத்த கடந்த நான்கு ஆண்டுகளாகவே படைப்பாளிகள் வலியுறுத்தி வந்தனர். போர் மும்முரமாகி இருந்ததால், அப்போது நடத்த முடியவில்லை. அறிந்ததைப் பகிர்தல், அறியாததை அறிந்துகொள்ள முயல்தல்தான் இந்த மாநாட்டின் நோக்கம். நாங்கள் இனவாதிகளை எதிர்க்கிறோமே தவிர,படைப்பாளிகளை அல்ல!
'இலங்கை மாணவர் கல்வி நிதியம்' என்ற அமைப்பு மூலம் பெற்றோரை இழந்த பிள்ளைகள் 346 பேருக்கு கல்வி உதவி செய்கிறோம். வன்னி முகாம்களில் உள்ள போராளிக் குழந்தைகளின் கல்விக்காக ஆசிரியர்களை பணியில் அமர்த்தி இருக்கிறோம். இலங்கையில் எத்தனையோ தமிழ் எழுத்தாளர்கள் இன்று முடமாகி துன்பத்தில் இருக்கிறார்கள். அவர்களை கை தூக்கிவிட வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. தயவுசெய்து இதை அரசியல் ஆக்க வேண்டாம்...'' என்றார் உருக்கமாக!
சினிமா திரையின் மூலமோ, தமிழ் உரைகளின் மூலமோ ஈழத்தின் கொடூரத்தை மறைக்க முடியாது என்பதுதான் உண்மை!
- த.கதிரவன்
விகடன்