[ புதன்கிழமை, 21 யூலை 2010, 04:14.31 பி.ப | இன்போ தமிழ் ]

சிறிலங்கா வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெண்கள் எந்தவித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் தாம் நாள் தோறும் வதைபடுவதாக தெரிவிக்கின்றனர்.
தமக்கு ஏற்ப்பட்டுள்ள இந்த அவல நிலை தொடர்பாக அவர்கள் வரைந்துள்ள கடிதத்திலேயே இது குறித்து தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் உள்ள செய்தியாளர் ஒருவரின் ஊடாக இக்கடிதம் எமது செய்தித்தளமான 'புதினப்பலகை'க்கு கிடைத்தது.
அழுது அழுது அலுத்துப்போய் அமைதியின் விசனத்தில் ஆர்ப்பரிக்கும் எங்களின் உள்ளமும் உடலும் நலிந்து சாவைக்கேட்கிறது. என விழிக்கும் இக்கடிதம்,
படிப்போருக்கு நெஞ்சை உருகவைக்கும் வகையில், 'எம்மை விடுதலை செய்து எம் கண்ணீரை துடையுங்கள்' என்ற தலைப்பில் அமைந்துள்ள அந்தக்கடிதம் வருமாறு,
ஆண்டுகள் பல கடந்துள்ள நிலையில் எங்களைப்போல இலங்கையில் இருக்கின்ற சிறைச்சாலைகள் அனைத்திலும் நூற்றுக்கணக்கான உறவுகள் கண்களில் நீர்வழிய கானலாகிப்போகும் தங்கள் விடுதலைக்குரிய நாட்களை எண்ணி கிடக்கின்றர்.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கௌரவ ஜனாதிபதி உட்பட எவருக்கெல்லாம் மனிதநேயமுள்ளதென நினைக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம், உதாரணமாக வத்திகானில் வாழ்கின்ற 63வது பாப்பரசர் வரைக்கும் எங்கள் விடுதலையைக்கோரி எழுதி அனுப்பிய கடிதங்களுக்கு அளவேயில்லை, அதனூடான முடிவுகளுமில்லை.
எங்கள் கடிதங்களும் கைது செய்யப்பட்டுக் கிடக்கிறதா என நினைக்கத்தோன்றும் எண்ணங்களின் வேதனையை இறைதூதன் கேளாத நாளில்லை.
அழுது அழுது அலுத்துப்போய் அமைதியின் விசனத்தில் ஆர்ப்பரிக்கும் எங்களின் உள்ளமும் உடலும் நலிந்து சாவைக்கேட்கிறது. நாம் மனிதர்களா / மிருகங்களா என்பதற்குக் கூட எவரும் பதில் சொல்லவில்லை.
குடிக்கும் தண்ணீரிலிருந்து, உண்ணும் உணவு வரைக்கும், அடிப்படைத்தேவை முழுவதும் அலட்சியப்படுத்தப்பட்டு அசிங்கமான வாழ்க்கையைத் தந்தன பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும், அவசரகாலச் சட்டமும்.
நாம் எந்த நேரமும் கொல்லப்படலாம் என்ற எண்ணம் வருவதில் என்னதான் தப்பிருக்கிறது?
உறவுகளைப் பிரிந்து உற்றவர் யாவரையும் பிரிந்து நாதியற்றுக் கிடக்கும் எங்களை விடுதலை செய்யுங்களென்றுதானே கேட்கிறோம்.
எங்கள் கடிதங்களை வாங்கியவர்களே, எங்களை மறந்துவிட்டீர்களா?
தயவுசெய்து எங்கள் கடிதங்களைப் பாருங்கள். எங்கள் பரிதவிப்பிற்கு பதில் சொல்லுங்கள்.
ஜனநாயகம் எங்களுக்கில்லையா?
ஐந்து வயதுப் பிள்ளையோடு தாயும், தாயின் தாயுமாக இங்கே பரிதவித்து நிற்கின்றோம். தாய்க்குலங்களுக்கே தலைவிதி இதுதானா?
கண்கள், கால்கள், கைகள் என உடலுறுப்புக்களை இழந்து தடுமாறித் தவிக்கும் உங்கள் உறவுகளை உதாசீனப் படுத்துவது ஏனோ?
கணவனைப் பலிகொடுத்தோர்கள், காணாமல் போயுள்ளவரைத் தேடிவந்ததால் கைதுசெய்யப்பட்ட எங்களையும் காப்பாற்றுங்கள் என்றுதானே கேட்கிறோம்.
குழந்தைகளும் தாய்மாரும் படுகின்ற பெருந்துன்பத்தை யாராவது நிறுத்துங்கள் எனறுதானே கேட்கிறோம்.
பெற்றவர்கள் பாலைக் கொடுப்பதற்கும், பிள்ளைகள் பாலைக் குடிப்பதற்கும் படுகின்ற வேதனை விபரிக்க முடியாதவொன்று.
அம்மா, அப்பா எங்கே? எப்போது எங்களை விடுதலை செய்வார்கள் என்ற பல கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாது தவிக்கும் தாய்மார்களுக்கு; தயவுள்ள நீங்களாவது பதில் சொல்லமாட்டீர்களா?
நாங்கள் பெண்கள்!
தூங்க முடியாது, துணிதுவைக்க முடியாது அல்லற்படுகின்றோம்.
எங்களுக்கென தனித்துவமான எதுவுமில்லாத நிலையில் எங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அரசியல் தலைவர்களே, மனிதநேயமுள்ளவர்களே, பல்கலைக்கழக ஒன்றியங்களே, மகளிரமைப்புக்களே உங்களுக்கு விருப்பம் ஏதுமில்லையா?
உங்களைத்தான் கேட்கிறோம். எங்களை விடுதலை செய்ய வழிசமையுங்கள்.
தயவுசெய்து எங்கள் இன்னல்களைப் புரிந்துகொள்ளுங்கள்.
உங்களை விட்டால் எங்களுக்கு வேறு யார் கதி?
உங்கள் கருணைக்கண்களைத் திறந்து எங்களை ஒருமுறை பாருங்கள்.
நீங்கள் நிச்சயம் மிகவிரைவில் எங்களை விடுவிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்தான் நாட்களைக் கடத்துகிறோம்.
இலங்கையில் உள்ள சிறைகளில் வாடும்
மகளிர் தமிழ் அரசியல் கைதிகள் சார்பாக
கொழும்பு வெலிகடை மகளிர் பிரிவு.
http://www.infotamil.ch/ta/view.php?2bEEQMe0dEgme0ecKA0g4a4Hd4Acd3cYJ2dc2Coc3b424OS3e220Mq20