[இவ் விடயம் 13. 05. 2010]
வாழ்வின் முக்கியமான காலகட்டமொன்றில் நாம் பயணிக்கும் பாதை இரண்டாகப்பிரியலாம். அதில் ஒன்று எக்களுக்கு மிகவும் பழகமானதாகவும் பலரும் பயணிக்கும் எழிதான பாதையாக இருக்கும்.
இன்னொன்று எங்களுக்கு பழக்கமில்லாத ,கடினமான,பலரும் விரும்பாத பாதையாக இருக்கும்.அந்த இக்கட்டான காலகட்டத்தில் நமக்கு முன் இரண்டு தெரிவுகள் இருக்கும்.
ஆனால் தீர்மானம் ஒன்றாக இருக்கவேண்டும்.இது ஆங்கில கவிஞன் ரொபேட் புரொஸ்ட் இனது சிந்தனையில் வந்தது. இதை ஆதாரமாக வைத்து எழுதப்பட்ட கட்டுரை ஒன்றை இணையத்தில் படித்த போது, புலம்பெயர் தமிழ் சமூகத்தின் “இரண்டும் கெட்டான்” இன்றைய நிலைதான் ஞாபகம் வந்தது. இப்படி சொன்னால் இதை சிலர் விரோத மனப்பான்மையோடு வெறுப்பாக உற்றுநோக்குவாரும் உண்டு.
தமிழனின் வாழ்வில் “மே18″ இன் பின்னரான காலப்பகுதியில் எதை யார் பேசினாலும்,எழுதினாலும் அதை பலரும் “கறுப்பு” கண்ணாடியணிந்து சந்தேக கண்ணோடு பார்த்து சம்பந்தப்பட்டவருக்கு “விலைபோனவன்” “துரோகி” என்ற பட்டம் கொடுப்பது சர்வசாதாரண நிலையாகிவிட்டது. அதுவும் இப்போது யார் யார் என்ன எழுதுகிறார்கள்? எதை எழுதுகிறார்கள்? எதைப்பற்றி எழுதுகிறார்கள்? என்பது வினோதமாகவிருக்கிறது.
ஊடகம் என்பது சமுதாயத்தின் ஒரு தூண். ஊடகவியலாளன் என்பவன் ஒரு சமுதாயத்தின் காவல் நாய் போன்றவன் என ஒரு ஊடகர் எழுதியிருந்தது ஞாபகம் வருகிறது.
பேசுவதற்கு முன் ஒரு முறை சிந்தனை செய். எழுதுவதற்கு முன் மூன்று முறை சிந்தனை செய் என்பார்கள். ஊடக சுதந்திரம், ஊடக தர்மம் என்பதை ஒரு ஊடகன் என்பவன் எத்துணை மதித்து நடக்கவேண்டும் என்பது மிக மிக முக்கியம்.
ஊடகவியலாளன் என்பவன் உணர்வுகளால் உந்தப்பட்டவனாக இருக்கக்கூடாது. ஆனால் உணர்வுள்ளவனாக உண்மையானவனாக இருக்கவேண்டும். போர் வாளை விட ஒரு எழுத்தாளனின் பேனா கூர்மையானது, வலிமையானது என்பார்கள். பல போராட்டங்களின் வெற்றிகளுக்கும் பல சமுதாயமாற்றங்களின் பின்னணியிலும் பல எழுதுகோல்கள் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது என்பது வரலாறு.
இக்கட்டான சூழ்நிலையில் வாயடைக்கப்பட்ட சமூதாயம் ஒன்றின் மனக்குரலாக ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் இருக்க வேண்டும். மக்களின் அடி மனத்தில் விடைதெரியாமல் கிடக்கும் கேள்விகளாக இருக்கவேண்டும். யாரையும் தடவுவதாகவோ இல்லை அழுத்தங்களுக்கு அடிபணிவதாயோ இருக்ககூடாது.
சரியா? பிழையா? மனம் திறந்து துணிவோடு எழுதுகோலை எடுப்பவனே உண்மையான போராளி. சமுதாய காவல் நாய்.
சரி ஏன் இந்த ஆலாபனை?அலட்டல்? என்று சிந்திக்கலாம். விடயத்துக்கு வருவோம்.
“மே18″ என்பது ஈழத்தமிழனின் வாழ்வில் ஒரு மறக்கமுடியாத “சுனாமி”.அது தாயகத்தில் வாழும் மக்களை மாத்திரம் அல்ல புலம்பெயர் தேசத்திலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது யதார்த்தம்.
2008 இன் ஆரம்பபகுதியிலேயே, புலம்பெயர் தேசத்தின் கட்டுமானங்கள் ஆட்டம் காண ஆரம்பித்தது. ஆனால்,அதை வெளித் தெரிய விடாமல் ஒட்டியும் முண்டுகொடுத்தும் பூசி மெழுகியும் பயணிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. “சரிப்படுத்திவிடலாம்” என்ற நம்பிக்கை பலருக்கு இருந்தது. அந்த தெளிவான நம்பிக்கையை பலமாக கொண்டே தமிழீழ போராட்டத்துக்கு உறுதியான பக்க பலத்தினை புலம்பெயர் தமிழினம் வழங்கியது.
வெளிப்படையாக சொல்லப் போனால், தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் “அபரீதமான கட்டுமான வளர்ச்சிக்கு” அடித்தளமாகவிருந்தது புலம்பெயர்சமூகம். அந்த செயற்பாடுகளுக்கு செயல்வடிவம் கொடுத்து, தமிழீழ விடுதலைப்போராட்டத்தினை சர்வதேசம் வியந்து பார்க்கவைத்தது விடுதலைப்புலிகளின் சர்வதேச வலைப்பின்னல். இந்த உறுதியான வலைப்பின்னலை போராட்டத்தின் ஆரம்பகால கட்டத்தில் பல சாவால்களை கடந்து உருவாக்கிய பெருமை கே.பி யினை சாரும். இப்போது கே.பி மீது குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டாலும், அவர் மீது பலரும் இப்போதும் அபிமானமாக இருப்பது உண்மை. ஏனெனில் பிராந்திய வல்லாதிக்கங்களை மதிநுட்பமாக கையாண்டு , தடைகளை சாதுரியமாக கடந்து தமிழீழ விடுதலைப்போராட்டத்துக்கு வலுச்சேர்த்தவர் கே.பி. அவர் மட்டுமல்ல அவரின் வலைப்பின்னனில் இருந்த பல புலம்பெயர் செயற்பாட்டாளர்களின் மதிநுட்பமான பணி தமீழ விடுதலைப்போராட்டத்தினை கெரில்லா போர் முறையில் இருந்து மரபு வழி போருக்கு முன்னேற வைத்தது. 30 வருடங்களாக சிறிலங்கா அரசுக்கும் சர்வதேச வல்லாதிக்கங்களுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்தது விடுதலைப்புலிகளின் சர்வதேச கட்டமைப்பு. இன்று வரை இவர்தான் “கே.பி” என்று அடையாளம் காட்ட யாருமே இல்லை.
கே.பி பற்றி துதி பாடுவது நோக்கம் அல்ல. “மரணித்தால் மாவீரன், சிறைபட்டால் துரோகி” என்று எங்கோ வாசித்தது கே.பி க்கும் பொருந்தலாம். கே.பி யின் கைது பற்றிய பலரின் சந்தேகங்களையும் அதன் பின்னணியையும் பிறகு பார்ப்போம்.
தமிழீழத்தில் களமாடிய போராளிகளின் தளராத மன உறுதிக்கும் அவர்களின் தணியாத போர்க்குணத்திற்கும் உந்து சக்தியாய் புலம்பெயர் சமுதாயத்தின் தளராத ஆதரவும்,சர்வதேச வழங்கலும் இருந்தது.இந்த இடத்தில் தமிழீழ மண்ணில் போராளிகளோடு போராளிகளாய் நின்ற மக்களின் தியாகங்களை யாராலும் மறந்துவிடமுடியாது.அவர்களையும் போராளிகளையும் பிரித்து பார்க்க முடியாது.
சிறிலங்காவுக்கும் சர்வதேச வல்லாதிக்கங்களுக்கும் தலையிடியாகவும் அவர்களின் மிக முக்கிய இலக்காகவும் இருந்த “தமிழீழ விடுதலைப்புலிகளின் வலைப்பின்னலை” எப்படியாவது உடைக்கவேண்டும் என்பதே அவர்களின் முதல்கட்ட பணியாகவிருந்தது.
இதற்காக அவர்கள் பல்வேறு மட்டங்களில் பலவிதமான ஆலோசனைகளைப்பெற்றும்,விடுதலைப்புலிகளின் சில சில கட்டமைப்புகளில் ஊடுருவியும் தங்களின் நடவடிக்கையினை ஆரம்பித்தார்கள். இருந்தாலும் அவர்களால் எந்தவிதமான முன்னேற்றத்தினையும் காணமுடியவில்லை. அதற்கான மிக முக்கிய காரணம், வெளிநாடுகளில் எந்தளவு மிக உறுதியான கட்டுமானத்தோடு “விடுதலைப்புலிகளின் உளவுத்துறை” இருந்ததோ அதை விட பல மடங்கு உறுதியாக தமிழீழத்திலும் சிறிலங்காவிலும் செயற்பட்டுவந்ததே காரணம்.
“பொட்டுஅம்மானின்” ரகசிய வலைப்பின்னலும் “கே.பி” இனது சர்வதேச வழங்கல் கட்டுமானமும் “இன்ரபோலுக்கே (interpol)” இடியப்பம் தீத்துவதாய் இருந்தது. அது அவர்களை மேலும் மேலும் எரிச்சலையும் கோபத்தினையும் ஏற்படுத்டியிருந்தது.
ஒருபுறம் விடுதலைப்புலிகளின் இராணுவப்பலம் அதிகரிக்க,மறுபுறம் அவர்களின் உளவுத்துறையும் சர்வதேச செயற்பாடுகளும் வலுப்பெற ஆரம்பமானது.
ஒருகட்டத்தில் விடுதலைப்புலிகளை ராணுவ ரீதியாக சிறிலங்கா ராணுவத்தினால் தோற்கடிக்கவே முடியாது என்பதை சிறிலங்காவும் சர்வதேச வல்லாதிக்கமும் தெளிவாக உணர ஆரம்பித்தார்கள்.
அப்படியானால் எப்படித்தான் விடுதலைப்புலிகளை தோற்கடிப்பது?
இந்தக்கேள்விக்கான பதிலை கண்டுபிடிக்க பகீரதப்பிரயத்தனம் செய்தது சிறிலங்கா அரசும்,சர்வதேச வல்லாதிக்கமும். இதற்காக போர் அனுபவமும் மதினுட்பமும் கொண்ட உலகில் உள்ள பல வல்லுனர்களின் ஆலோசனை பெறப்பட்டது.அவர்களின் தந்திரோபாயத்துடன் கூடிய “விடுதலை புலிகளை தோற்கடிப்பதற்கான நிகழ்ச்சிநிரல்” தயாரானது.
- தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகளினதும் தளபதிகளினதும் அபரீதமான “போர்க்குணத்தினை” குறைக்கவேண்டும்.ஓயாத அலைகளாக இருக்கும் இவர்களுக்கு சற்று ஓய்வெடுக்க வழிசெய்யவேண்டும்.
- விடுதலைபுலிகளினதும் போராட்டத்தினையும் இருகரங்களாக இருக்கும் மக்களை விடுதலைப்புலிகளில் இருந்தும் போராட்டத்திலும் இருந்து சற்றேனும் விலக வைக்கவேண்டும்.
- விடுதலைப்புலிகளின் இயக்கத்திலும் சர்வதேச நாடுகளிலும் சற்று குழப்பத்தில் தளம்பல் மனநிலையில் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து அவர்களை விலைபேசுதல்.
- விடுதலைப்புலிகளுக்கான சர்வதேச வழங்கலை தற்காலிகமாகவேனும் இடைநிறுத்தம் செய்யவேண்டும்.
மேற்கூறப்பட்ட 4 மாங்காய்களையும் ஒரே கல்லில் அடிக்க என்ன வழி என்று தேடிய சிறிலங்காவுக்கு சர்வதேச நாடு ஒன்று மிக சக்திவாய்ந்த ஆயுதத்தினை கொடுத்தது. அது என்ன ஆயுதம்? எந்த நாடு?
தொடரும்……..!!!
- தமிழ்ப்பொடியன்