<mathan.dxb@gmail.com>
Subject: பொலிஸ் தடுப்பில் உள்ளோர் மீது சித்திரவதை: வெளியாகும் அதிர்ச்சி செய்திகள் !

பொலிஸ் தடுப்பில் உள்ளோர் மீது சித்திரவதை: வெளியாகும் அதிர்ச்சி செய்திகள் !

24 October, 2011 by admin

இலங்கையில் பொலிஸ் காவலில் இருப்போர் மீதான சித்திரவதைகளும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகளும் அளவின்றி தொடர்வதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ் சாட்டுகின்றன. இந்த ஆண்டில் கடந்த 9 மாதங்களில் மட்டும் வடக்கு கிழக்குப் பிரதேசங்களுக்கு வெளியே பொலிஸ் நிலையங்களுக்குள் நடந்துள்ள சித்திரவதைகள், மோசமான நடாத்துதல் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் என கிட்டத்தட்ட 98 சம்பவங்கள் தம்மிடம் பதிவாகியிருப்பதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் நிகழ்சித்திட்ட இயக்குநர் பசில் பெர்ணான்டோ பி.பி.சியிடம் சுட்டிக்காட்டினார்.
கொல்லப்பட்ட 13 பேரில் பெரும்பாலானவர்கள் பொலிஸ் காவலில் இருந்து தப்ப முயன்றபோது அல்லது பொலிசாருடன் ஏற்பட்ட மோதலின் போது கொல்லப்பட்டதாக பொலிஸார் வழமையான பாணியில் கூறிவருவதாகவும் அவர் தெரிவித்தார். வடக்கு கிழக்குப் பிரதேசங்கள் தொடர்ந்தும் இராணுவ மயமாக்கப்பட்டிருக்கின்ற நிலையில், அங்கு மக்கள் மத்தியில் நிலவும் அச்ச சூழ்நிலை காரணமாக அங்குள்ள நிலைமை பற்றி தமக்கு உரிய தகவல்கள் கிடைப்பதில்லையென்றும் பசில் பெர்ணான்டோ கூறினார். இவ்வாறு பொலிசாரின் காவலில் இருந்தபோது பாதிக்கப்படுபவர்கள் சட்டவழி பரிகாரங்களை தேடுவதற்கான கதவுகளும் இப்போது மூடப்பட்டிருப்பதாக பல்வேறு சட்ட ஏற்பாடுகளை சுட்டிக்காட்டி ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இயக்குநர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இந்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இலங்கைப் பொலிஸ் பேச்சாளர் எஸ்பி அஜித் ரோஹனவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இலங்கையில் அமுலிலுள்ள சித்திரவதைகள் சட்டத்தின் சட்டவிளக்கத்துக்கு உட்படும் சம்பவத்தை மட்டுமே சித்திரவதையாக கருத வேண்டும் என்று கூறினார். அவ்வாறு நீதிமன்றத்தால் கண்டறியப்படும் சித்திரவதைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.