ஆல்பம்

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2011,21:53 IST

இந்த தேர்தலில் பெரிய கட்சிகளாக கூறிக் கொண்ட தே.மு.தி.க., – பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் போன்றவை படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், ம.தி.மு.க., தனித்துப் போட்டியிட்டு 150 உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றியிருப்பது, அக்கட்சியினருக்கு புது தெம்பை அளித்துள்ளது.

கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிய ம.தி.மு.க., இந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களமிறங்கியது. இதில் கணிசமான வெற்றியை பெற முடியாவிட்டால், கட்சியின் எதிர்காலமே கேள்விக்குறியாகி இருக்கும்.

எனினும், எதிர்பார்த்ததை விட கூடுதல் இடங்களை ம.தி.மு.க., பிடித்துள்ளது. நேற்று மாலை 6.30 மணி நிலவரப்படி, மாநகராட்சிகளில் எட்டு கவுன்சிலர் பதவிகளையும், ஒரு நகராட்சித் தலைவர் பதவியையும், 48 நகராட்சி உறுப்பினர் பதவிகளையும், ஏழு பேரூராட்சி தலைவர் பதவிகளையும், 82 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளையும், நான்கு ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளையும் வென்றுள்ளது.

இது, ம.தி.மு.க.,வுக்கு அடிமட்டத்தில் இன்னும் செல்வாக்கு உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது. இதனால், வைகோ உட்பட ம.தி.மு.க.,வினர் சற்று தெம்பாக உள்ளனர்.