"SELF DETERMINATION IS KEY TO THE WORLD PEACE"
ஒடுக்குபவர்களையும் அதற்கு வக்காலத்து வாங்குபவர்களையும் தோலுரிக்கும் ஈழ விடுதலைப் போரின் தீ சுவாலைகள்
Thursday, June 2, 2011, 8:58
நூற்றுக்கணக்கான தோழர்களுடன், வேலுப்பிள்ளை பிரபாகரனை இரண்டு ஆண்டுகளுக்கு முன் கடந்த 2009ம் ஆண்டு மே திங்கள் 18ம் நாள் அழித்தொழித்துவிட்டதாக, சிரிலங்கா இராணுவம் கொக்கரித்தது. மறுநாளே ஈழப்போரில் வெற்றியடைந்ததாக சிரிலங்கா மக்களவையில் உற்சாகத்துடன் ராசபட்சே எக்காளித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்த நாளில்தான் சிரிலங்கா தமிழர்கள் தாங்கள் போரிட்டு பெற்ற சுதந்திரத்தை பாசிச, விரிவாக்கவாத சிரிலங்காவிடம் பறிகொடுத்தனர்.
சிரிலங்கா பேரினவாத ஆட்சியாளர்களின் இராணுவத் தாக்குதலுக்கு பலியான நூற்றுக்கணக்கான ஈழத்தின் மகன்களை, மகள்களை ஈழத்திலுள்ள தமிழர்களும், வெளிநாட்டில் வாழும் ஈழத் தமிழர்களும் இந்த வாரம் நினைவு கூறுகிறார்கள். அன்று சிரிலங்கா ராணுவத்தின் மிரட்டலையும், உளவுத் துறையின் அச்சுறுத்தலையும் மீறி ஈழத் தமிழர்கள், ஒரு சகாப்தத்திற்கு மேல் நடந்த ஈழ விடுதலைப் போரில் உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு தமது அஞ்சலியை செலுத்தினர்.
தங்களது வருங்காலத்தை தீர்மானிக்கின்ற ஒரே சக்தி ஈழத் தமிழர்கள் மட்டுமே என்றும் அவர்கள் வரலாற்று உண்மைக்கு புறம்பாக “சமரச ஒப்பந்தம்” என்ற பேரில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான எதையும் ஏற்பதில்லை என்பதையும் மீண்டும் வலியுறுத்தினர். ஈழத்தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம் என்ற பேரில் சிரிலங்கா அரசுடன், இரகசிய, தனிச் சுற்று பேச்சுவார்த்தை நடத்துவது எதையும் ஏற்க மாட்டோம் என அவர்கள் திடமாக அறிவித்தனர்.
தனிச் சுதந்திரம் கூடிய “தமிழ் ஈழம்” ஒன்றே இதற்கு தீர்வு என்பது அங்கீகரிக்க வேண்டும் என அவர்கள் முன்வைக்கின்றனர். பேரினவாத சிரிலங்கா ஆளும் வர்க்கத்தால் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், நெருக்கடிகள், பாகுபாடுகள், பல நூற்றாண்டு வரலாறு கொண்டது. ஈழப் போரின் கடைப்பகுதியான 2009-ன் முதல் ஐந்து மாத காலத்தில் ஈழமக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அழித்தொழிப்பு நிகழ்வு தேசிய அளவிலான பல்லாண்டு போரின் மிகவும் மோசமானதும், மிருகத்தனமும் மிக்க கட்டமாகும்.
போரின் கடைசி நாட்களில் மட்டும் போராளிகள் மற்றும் அப்பாவிகள் என்று, கொலைகார சிரிலங்கா ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டவர்கள் நாற்பதாயிரத்தையும் தாண்டும். சர்வதேச சமூகம் மவுனமாக பார்த்துக் கொண்டிருக்கும் போதே கொத்து குண்டுகளும், இரசாயன குண்டுகளும் அப்பாவி பொதுமக்கள் மீது வீசப்பட்டது. குடியிருப்புகள், பள்ளிகள், மருத்தவமனைகள், ஆம்புலன்ஸ்கள், பொதுமக்கள் தங்கும் இடங்கள் மற்றும் துப்பாக்கி பயன்படுத்தக் கூடாது என்று அறிவிக்கப்பட்ட இடங்கள் மீது கூட ஈவிரக்கமின்றி குண்டு மழை பொழியப்பட்டது. யுத்தம் முடிந்தது என்று அறிவிக்கப்பட்ட மறு நிமிடமே, வடக்கு, கிழக்குப் பகுதியிலிருந்த அனைத்து மக்களும், சிரிலங்கா அரசால் “அகதிகள் முகாம்” என்று அழைக்கப்பட்ட உண்மையில் “சிறைச்சாலை”க்கு கட்டாயமாக புலம் பெயர்த்தப்பட்டனர்.
ஒரு சாதாரண கணக்கீட்டாளர் கணிப்புப்படி அவ்வாறு புலம் பெயர்த்தப்பட்டவர்கள் 3.5 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். அதில் இன்றும் பெரும் பகுதியினர், ஈழப் போரில் சிரிலங்கா ராணுவத்தால் நாசமாக்கப்பட்ட அவர்களது கிராமங்களுக்கு திரும்பிச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மொத்தத்தில் ஈழம் சிரிலங்கா அரசால், சிரிலங்கா ராணுவத்தின் ஒரு மாபெரும் சிறைக் கூடமாகத்தான் மாற்றப்பட்டுள்ளது. இங்கு எதிர்க்கருத்து, அரசியல்சார் கோரிக்கை, விமர்சனம் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. உண்மையான நோக்கம் என்னவெனில், ஈழம் என்ற ஒரு நாட்டுணர்வை அடிமைப்படுத்துவதும், தாயகம் என்ற ஒரு நம்பிக்கையை முற்றாக அழிப்பதுமேயாகும்.
வறுமையிலும், இன்னலிலும் ஆட்படுத்துவதன் மூலம் ஈழத்தமிழர்கள், தனி ஈழம் என்ற அவர்களது நோக்கம் நப்பாசை என்றும், தற்போதைய நிலைப்பாடுதான் தங்களது தலைவிதி என்ற நிலைக்கு தள்ளப்பட்டு ஈழ விடுதலை கைவிடப்பட வேண்டும் என்று சிரிலங்கா அரசு எதிர்பார்க்கிறது.
தொடர்ந்து பாசிச அரசின் அடக்குமுறைக்கு கீழ் வாழ்ந்து வரும், சிரிலங்கா அரசால் கட்டவிழ்த்துவிடப்படும் அரசு பயங்கரவாதத்திற்கு ஆட்பட்டுள்ள, தங்களது தேசத்தின் மீதான காலம் காலமான தாக்குதலை சந்தித்து வரும் அந்த ஈழத் தமிழர்களைத் தவிர ஒரு இன அழிப்பாளரான, சிரிலங்கா அரசையும், அவர்களது ராணுவத்தையும் கூலிப் படையையும் தண்டிக்க வேறு யார் கோர முடியும்? சிரிலங்கா அரசும் அவர்கள் ராணுவமும் புரிந்துள்ள கொடூர குற்றத்திற்கான தண்டனையை பெற உகந்தவர்கள்.
ஆனால் இப்போது முடிவு செய்யப்பட வேண்டிய கேள்வி: எதற்காக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்? “மனித குலத்திற்கு எதிரான குற்றத்திற்காகவா?”, “போர் குற்றத்திற்காகவா?”, “சர்வதேச குற்றத்திற்காகவா?”, “சர்வதேச மனித உரிமை மீறலுக்காகவா?”, “ஜெனிவா தீர்மானத்திற்கு புறம்பாக நடந்து கொண்டதற்காகவா?” அல்லது, தேச சுய உரிமைக்காகவும், தேச விடுதலைக்காகவும் போராடிய ஒரு நாட்டையே அழித்தொழிக்கும் முயற்சிக்காகவா?. இங்குதான் ஓர் மக்கள் இயக்கத்திற்கும், ஏகாதிபத்திய நாடுகளில் உருவாக்கப்பட்ட சர்வதேச மனித உரிமை தொழிற்சாலைகளுக்கும், அரசு சாரா தன்னார்வ குழுக்களுக்கும் இடையிலுள்ள வேறுபாடு வெளிப்படுகிறது.
மனித நேயம், மனிதாபிமான அடிப்படையில் தலையீடு என்ற போர்வையில், ஏகாதிபத்தியங்களும், அவர்களது கைக்கூலிகளான சிரிலங்கா போன்ற தரகு முதலாளித்துவ அரசுகளும், இத்தகைய மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்து வருகின்றனர். சிரிலங்கா அரசு மனிதாபிமான அடிப்படையில் வடபுலத்து மக்களை விடுவிப்பதற்கான “போர்” என்று ஈழப் போரை சொல்லிவருகிறது.
இவ்வாறுதான் சர்வதேச போர் வெறியர்கள், போர்க் கருவி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், தங்களது போர்க் கருவியை சர்வதேச சந்தையில் விற்று வருகின்றனர். இத்தகைய மொழியில்தான் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ள ஐ நா சபை, நோட்டோ மற்றும் ஐரோப்பிய கட்டமைப்பு மக்கள் மீது மக்கள் இயக்கங்கள் மீது போர் பிரகடனம் செய்கிறார்கள்.
இத்தகைய செயலை மூடி மறைக்கத்தான் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஐ நா சபை “மனித உரிமை” “மனித குலத்திற்கெதிரான, குற்றத்திற்கு எதிராக” என்பன போன்ற மாநாடுகளுக்கு விவாத நிகழ்வுகளுக்கு பல நூறு கோடி டாலர்களை செலவழித்து வருகிறது. இவர்கள் “மோதல் நடந்து” வரும் பகுதிகளில் எதேச்சதிகாரத்திற்கு எதிராக கிளர்ந்தெழும் மக்களை, அவர்களுக்காக போராடும் தலைவர்களை குறை சொல்வதன் மூலம், குற்றம் சாட்டி பழிவாங்குவதின் மூலம், ஒடுக்குபவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் அதே நேரத்தில், ஒடுக்குபவர்களின் செயலை அமைதியாக அனுமதிக்கவே செய்கின்றனர். “சிக்கலுக்கான தீர்வு” என்ற பெயரில், ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களது உரிமைக்காக தொடர்ந்து போராடும் உரிமையை பறிக்க முயற்சிக்கின்றனர்.
ஒடுக்கப்படும் மக்கள்-ஒடுக்குபவர்கள், ஒடுக்கப்படும் நாடுகள் ஒடுக்கும் நாடுகள் என்று உலகம் இரண்டாக பிரிந்துள்ள நிலையில், “மனித குலம்” “மனித நேயம்” என்று பேசுவதே ஒரு மோசடிதான். ஒடுக்கப்படும் நாடுகள் சுயநிர்ணய உரிமைகள் கோருவது “மனிதாபிமானம்” அடிப்படையில் அல்ல. ஒடுக்கப்படும் ஒவ்வொரு நாடும், பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை கோரியது அவர்களது அரசியல் உரிமை.
இது இருபதாம் நூற்றாண்டில் காலனி ஆதிகத்திற்கும், ஏகாதிபத்தியத்தியத்திற்கும் எதிரான உலகளாவிய மக்கள் போராட்டத்தின் தாக்கத்தால், ஐ நா சபையே ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்த நியாயமான அடிப்படை உரிமையாகும். இந்த பிரிக்க முடியாத அரசியல் உரிமைக்காகத்தான், கடந்த நான்கு சகாப்தமாக ஈழத் தமிழர்களும், ஈழ விடுதலைப்புலிகளும், எந்த வித சமரசத்திற்கும் விலைபோகாமல் போராடி வந்தனர். இந்த விடுதலைப் போரில், அவர்கள் மனம் குன்றாது துயருற்றார்களே ஒழிய என்றும் சரணடையவில்லை. இன்றும் கூட, சொல்லொணா தாக்குதலுக்கு உட்பட்டிருந்தாலும், அழிவின் முடிவுக்கே தள்ளப்பட்டிருந்தாலும், அவர்களது விடுதலை வேட்கை மாறவில்லை.
இந்த தருணத்தில், சுதந்திரமான, தனி ஈழத்தை அங்கீகரிக்காமல், “ஈழத்தமிழர்கள் ஆதரவு” என்றும் அல்லது அவர்களுக்காகவே இருப்பதாகவும், கூறி “போர்க்குற்றம்” “மனித குலத்திற்கெதிரான குற்றம்” என பேசி சில பிரிவினர் உரிமை கோரி வருவது, இந்த வீரமிக்க போராட்டத்தை காட்டிக் கொடுப்பது மட்டுமின்றி, ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக, இத்தகைய போர்க் குற்றங்களை செய்து வருபவர்களுமான சிரிலங்கா அதன் ஆதரவு இந்திய ஆளும் வர்க்கத்துடன் கை கோர்த்து நிற்பவர்களாகவே கருதப்படுவார்கள்.
யுக்தி என்ற பேரில் மக்களின் உள் ஆசையை சமாதானம் செய்பவர்களால் அல்ல, ஈழ மக்களால் மட்டுமே தங்களது விதியை தீர்மானிக்கும் உரிமை இருக்கிறது என்று கடந்த வாரம் ஜாப்னா பல்கலை மாணவர்கள் ஈழப் போரில் மாண்ட தியாகிகளுக்கு நினைவு கூறும்போது பிரகடனப்படுத்திய விஷயத்திற்கு இவர்கள் மதிப்பளிக்க வேண்டும்.
நூற்றாண்டுகளாக தமிழ்த் தேசிய சிறுபான்மையினரை நசுக்கி வந்த சிரிலங்க்கா ஆளும் வர்க்கத்தினர் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் தமிழ் ஈழ மக்கள் தங்களது சுதந்திரத்தை மீட்க முடியும். இந்த தண்டனை எதேச்சதிகார சிரிலங்கா அரசை முற்றாக அகற்றுவதன் மூலமும், ஈழத்தை மீட்பது மூலமும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமேயொழிய, ஆளும் வர்க்கத்தினரில் இங்கொன்றும், அங்கொன்றுமான சில உறுப்பினர்களை தண்டிப்பதோடு நின்று விடக் கூடாது.
நாம் ஒன்றை மறந்துவிடலாகாது. ராசபட்சே, மஹிந்தா, பசில், கோத்தபயா அல்லது சரத் பொன்சேகா இவர்களெல்லாம் வர்க்க அரசியலின் கருவிகள், ஏகாதிபத்தியத்தின் கைப்பொம்மைகள்தான். சிரிலங்கா அரசின் தொடர் ஆக்கிரமிப்பையும், அதன் வளங்களையும் ஏகாதிபத்தியம் தொடர்ந்து சுரண்டிச் செல்வதை எதிர்க்காமல், அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று ஓலமிடுவது, அவர்களது ஒடுக்குமுறையை நியாயப்படுத்துவதும், ஈழ விடுதலை இயக்கத்தை பின் தள்ளும் சூழ்ச்சியேயாகும்.
ஆட்டுத் தோல் போர்த்திய ஓநாய்களே இத்தகைய சந்தர்ப்பவாதத்திற்கு பொருந்துவர். ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாட்டின் விடுதலைப் போராளிகள் இத்தகைய பச்சோந்திகளால் ஏமாற்றப்படுவதை, பாசாங்கை நன்கு புரிந்து வைத்துள்ளனர்.
பின் யார்தான் இந்த சிரிலங்காவின் ஆளும் வர்க்கத்தை தண்டிப்பது? ஐ நா சபை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், அமெரிக்கா, இந்தியா, அல்லது சிரிலங்கா அரசு இதில் எதுதான் இந்த தண்டனையை கொடுக்கும்? நீதியை நிலை நாட்டும்? யார் ஒருவர் நியாயம் கோரி ஊசலாட்டமின்றி போராடும் ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் மீது நம்பிக்கை வைத்துள்ளனரோ அவர்களால் மட்டும்தான் இதற்கு விடை காண முடியும்.
மாறாக, ஏகாதிபத்தியத்திடம் ஊதியம் பெறுபவர்கள், ஒடுக்குபவர்களால் ஆதாயம் பெறுபவர்கள், இருக்கும் நிலை அப்படியே தொடர வேண்டும் என்பவர்கள் நியாயம் பெற தங்களது எஜமானர்கள் மீ நம்பிக்கை வைக்குமாறு அழைப்பது வேடிக்கையானது. இதுதான் ஏகாதிபத்தியம் வளர்த்து வரும் மனித உரிமை ஆலையின், தன்னார்வ குழுக்களின் மோசடியாகும்.
கொடுங்கோலர்கள், எதேச்சதிகாரர்கள் மக்களை கூட்டமாக அழித்தொழித்ததை எதிர்த்து இந்த ஐ நா சபை அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போன்ற சர்வதேச அமைப்புகள் நடவடிக்கை எடுத்து தண்டித்ததாக வரலாற்றில் இதுவரை எந்த பதிவும் இல்லை. அகில உலக அளவில் செயல்பட்டுவரும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், ஏகாதிபத்தியத்தால் நேரடியாக நிதி வழங்கப்பட்டு செயல்பட்டு வரும் அரசு சாரா நிறுவனங்களின் 2500 தொண்டர்களால் 150 நாடுகளில், சர்வதேச தன்னார்வ குழுக்களின் “சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கூட்டமைப்பு” என்ற அமைப்பின் உதவியுடன் செயல்பட்டு வருகிறது.
ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள ஆறு நாடுகளின் ஆளும் வர்க்கத்தினரை “மனித குலத்திற்கு எதிரான குற்றத்திற்காக” இந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தண்டித்திருக்கிறது என்பதில் ஆச்சரியமில்லை. ஏனென்றால் அவர்களெல்லாம் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர்கள். இந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சமீபத்திய நடவடிக்கை லிபியாவின் அதிபர் கடாபி மீது.
காரணம் என்னவென்றால், அமெரிக்காவின் ஏகாதிபத்திய, உள்நாட்டு தலையீட்டு போரை எதிர்த்த ஒரே காரணம்தான். அமெரிக்க கருத்துப்படி அவர் “போர் குற்றத்திற்காகவும்”, “மனித குலத்திற்கெதிரான குற்றத்திற்காகவும்” விசாரிக்கப்பட வேண்டியவர். இதற்கு மாறாக உலகத்தில் மிகப் பெரிய குற்றவாளிகளான – ஜார்ஜ் புஷ் (ஜுனியர்) மற்றும் (சீனியர்) பராக் ஒபாமா, டோனி பிளேர், இவர்களெல்லாம் சுதந்திரமாக உலகைச் சுற்றி வருவதுடன், இதில் சிலர் நோபல் பரிசும் பெற்றுள்ளனர். எனவே, ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த 30 நாட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற உறுப்பின நாடுகள் சூன் 2009ல் ஒன்று கூடி சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆப்பிரிக்க நாட்டை மட்டும் குறிவைத்து நடந்து கொள்வதற்கு ஆட்சேபணை தெரிவித்து அவர்களது உறுப்பினர்களை அதிலிருந்து விலகிக் கொள்ளச் செய்தனர்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிராசிக்கூட்டர் ஒரு சில தலைவர்களுக்கு ஆதரவாகவும், சிலருக்கு எதிராகவும் பாரபட்சமாக நியாயம் வழங்கி வருவதாக ஆப்பிரிக்க கூட்டமைப்பின் ஆணையர் ரம்டேன் லமாரா கூறுகிறார். இதையெல்லாம் அறிந்த யாராவது இந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போன்ற சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சட்ட அமைப்புகளின் “போர்க்குற்றம்”, “மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்” போன்றவற்றின் மீதான அரசியலை புரிந்து கொள்ளாமல் இருக்க முடியுமா?
ஐக்கிய நாட்டு சபையின் குணாதிசயமும் இதைத் தவிர்த்து வேறு எப்படி இருக்கும்? இந்த சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட சட்ட அமைப்பும், ஏகாதிபத்திய வாதிகளின் மற்றும் அவர்களுக்கு தொண்டூழியம் புரியும் அரசுகளின் கையில் உள்ள வலுவான ஆயுதம் என்பதோடு, போர் யுக்தியுமாகும்.
இது தோற்றுவிக்கப்பட்ட ஐந்தாம் ஆண்டே – இந்நிறுவனம் இதை உருவாக்கியதில் மூல கர்த்தா அமெரிக்க அதிபர் ரூஷ்வெல்ட் 1950-53ல் தென் கொரியாவிற்கு ஆதரவாகவும், மாசேதுங் தலைமையிலிருந்த புரட்சிகர சீனாவையும் எதிர்த்து போரில் ஈடுபட்டது. துவங்கப்பட்ட காலம் தொட்டு இன்று வரை, இந்த ஐக்கிய சபையும், “அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்” போன்ற சட்ட அமைப்புகளும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையில் உலகில் ஒரு புது ஒழுங்குமுறை உண்டாக்க சளையாது முயன்று வருகின்றனர்.
“பனிப்போர்” மற்றும் அதன் பின்னரான காலத்தில் இந்த அமைப்பின் செயல்பாடுகளே இதற்கு சான்றாக இருப்பது விளக்கப்பட வேண்டியதில்லை. இத்தகைய கருப்பு வரலாற்று பின்னணி உள்ள ஐ நா சபையை “சர்வதேச குற்றத்த்தை விசாரிக்கவும்”, “உலக அமைதி” காக்கவும் நடுவராக இருக்க அழைப்பது, ஏகாதிபத்தியத்தையும், ஒடுக்கும் பல்வேறு நாடுகளையும் அழைப்பதற்கு ஒப்பாகும் என்பதோடு, நியாயம் கிடைப்பதற்கான அனைத்து சாத்தியமும் மூடப்படும் என்பது திண்ணம்.
லிபியாவில் கடாபிக்கு எதிராக கிளர்ந்துள்ள “புரட்சியாளர்கள்” ஐ நா வின் குண்டுத் தாக்குதலை வரவேற்ற அதே நேரத்தில், லிபியாவின் ஜனநாயகத்திற்கும், அமைதிக்கும், நீதிக்கும் கதவை திறந்துள்ளார்களா? ஐ நா சபை தலைமையின் தலையீட்டை என்னதான் சொல்லி உலகிற்கு நியாயப் படுத்தினாலும், லிபிய மக்களுக்குத் தெரியும், இவர்களெல்லாம் ஏகாதிபத்தியத்தின் கையாட்கள் என்று தெரியும். இந்த “புரட்சியாளர்கள்” என அழைக்கப்படுபவர்கள் ஏகாதிபத்திய கையாட்கள் என்பதும், துரோகிகள் என்பதும் லிபிய மக்கள் நன்கறிவர்.
சமீபத்திய ஐ நா சபையின் சிறப்புக் குழுவின் சிரிலங்கா மீதான அறிக்கை அதனது உண்மையான நிலையை வெளிச்சம் போட்டு காட்டியிருப்பதை உன்னிப்பாக கவனிப்பவர்கள் அறிந்து கொள்வர். இந்த அறிக்கையின் அடிப்படையாக இருப்பதே ஐ நா சபைக்கு இருக்கும் “பெரிய வரம்பு” என்பதற்கு பின்னால் இருப்பதுதான். எல்லா ஏகாதிபத்திய ஏவலாள் போல் இது ஈழத் தமிழர்களுக்கான தனித்தாய் நாட்டையும், சுதந்திரத்தையும் இது ஆதரிக்கவில்லை என்பதோடு “அனைவருக்கும் பொதுவான தாயகம்” என்ற அடிமைத்தனத்தை தான் மீண்டும் வலியுறுத்துகிறது.
மாறாக தமிழீழ புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றியும், அவரது தலைமை பற்றியும், இந்த விடுதலை இயக்கத்தைப் பற்றியும் அவதூற பரப்புகிறது. ஈழத் தமிழர்களை “மனித கேடயமாக” பயன்படுத்துகின்றனர் என்றும் “பொதுமக்களை” நேருக்கு நேர் சுட்டுக் கொன்றார்கள் என்றும் இவ்விடுதலை இயக்கத்திற்கு எதிரான, உண்மைக்கு புறம்பான செய்திகளைச் சொல்லி குற்றம் சாட்டி வருகிறது.
இந்த ஐ நா சபையின் சிறப்பு ஆய்வுக்குழு சிரிலங்கா அரசு மீது ஐந்து முக்கிய குற்றங்களை, விதி மீறலை சொல்லும்போது, ஈழ மக்களை விடுவிப்பதற்காக, அவர்களுக்கு தனி ஈழம் பெற்றுத்தர பல்வேறு உயிர்த்தியாகங்கள் வரை செய்த அவர்கள் மீது அவர்களது மக்களை கொன்றழித்தார்கள் என்று 6வது குற்றச்சாட்டை, தமிழீழ புலிகள் அமைப்பின் மீது சுமத்தியுள்ளது. ஐ நா குழுவின் அறிக்கையை வரவேற்கின்ற வேளையில் ஈழத்தமிழர்கள் வாழ்வில் சிந்தித்தறியாத தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒரு குற்றவாளிகள்தான் என்பதையும் ஏற்கவேண்டும் என்பது போல் இந்த அறிக்கை உள்ளது.
ஆனால் தங்களது தசையாலும், குருதியாலும் கட்டிக்காத்த ஒரு அமைப்பின் மீது இத்தகைய ஒரு புனையப்பட்ட குற்றச்சாட்டை ஒடுக்கப்பட்ட தமிழ் ஈழ மக்கள் ஒரு போதும் ஏற்க மாட்டார்கள். சிரிலங்காவின் இனப்படுகொலை மீது ஐ நா சிறப்புக் குழு எவ்வளவுதான் கண்டனம் தெரிவித்தாலும், தமிழ் ஈழ விடுதலை புலிகள் அமைப்பு இந்த பாரபட்ச தீர்ப்பை ஒரு போதும் ஏற்காது.
சிரிலங்காவின் ஆளும் வர்க்கமும் இந்த அறிக்கையை நிராகரிக்கிறது. ஆனால் அது வேறு காரணத்திற்காக. ஏனென்றால் அவர்களுக்கு நன்றாகத் தெரியும், இந்த அறிக்கையைக் காட்டி மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகள் சிரிலங்காவிடம் பல பொருளாதார பலன்களை தட்டிப் பறிக்கவே பயன்படுத்தும் என்பதாலேயே, அவர்கள் இதை நிராகரிக்கின்றனர்.
தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அனைத்து தலைவர்களும் அழித்தொழிக்கப்பட்ட நிலையில், இந்த ஐ.நா. சபையின் சிறப்புக் குழுவின் அறிக்கை, தற்போது உயிருடன் உள்ள சிரிலங்கா ஆளும் வர்க்கத்தின் மீதுதான் சர்வதேச அமைப்பு நடவடிக்கை எடுக்கும் என்றும், அது தமிழ் ஈழ மக்களுக்கு ஆதரவானதே என்றும் தற்போது வாதிடுபவர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவை எதிர்நோக்கும் அப்பட்டமான ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது தங்களுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியை இந்த சந்தர்ப்பத்தில் பயன்படுத்தும் பச்சையான சந்தர்ப்பவாதிகள் மட்டுமேயாவர்.
எப்படியோ, தமிழ் ஈழம் பெற தங்களது இன்னுயிரை ஈந்த இந்த மண்ணின் மகன்ளையும், மகள்களையும் இந்த “போர் குற்றத்திலிருந்து” அவர்கள் (சந்தர்ப்பவாதிகள்) விடுவித்துள்ளதற்கு நாம் நன்றி சொல்லிக் கொள்வோம். ஆனால் தமிழ் ஈழப் போரின் முக்கியமான கட்டத்திலும் கைவிட்ட, அந்த ஓடுகாலிகளை, ஒடுக்கப்பட்ட தமிழ் ஈழ மக்கள், போலி இரக்கத்தோடு கூட அவர்களை மன்னிப்பார்கள் என்று நாம் எதிர்பார்ப்பதற்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை.
சுதந்திரமான, தனி ஈழம் அடைவதற்கான போர் வெல்லட்டும்.
(ஆங்கில மூல பிரசுரம்: நன்றி – Democratic Student Union, New Delhi)
இதனது ஆங்கிலமூலம் இந்தத் தளத்தில் இருக்கிறது. இதுவரை யாரும் கருத்ததெதையும் எழுதவில்லை.
நன்றி -தமிழ்த்தாய்
"எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு" - திருவள்ளுவர் –
Global Peace Support Group UK Ltd is a registered organisation based in London. The organisation dedicated to be involved in humanitarian and other related issues. We also work along with other similar organisations to promote peace and harmony among various societies..
GLOBAL PEACE SUPPORT GROUP - UK - TIRELESSLY WORK ON THE CONCEPT OF:
"SELF DETERMINATION IS KEY TO THE WORLD PEACE"
MOURNS ON THE CONTINUED TRAGEDY OF THE PEOPLE OF North & East of Tamil EELAM WITH THE HOPE OF ALL OF OUR ENDEAVOURS WOULD BRING AN END TO THOSE SUFFERING DURING THE YEAR AHEAD.
The International community has a duty towards the long suffering Sri Lankan Tamil population to restore their rights of SELF DETERMINATION.
Global Peace Support Group - believes that this is the ONLY way for a permanent PEACE in Sri Lanka.